நாம் தொலைத்த விளையாட்டுகள் - பல்லாங்குழி


பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். பொதுவாக புளியங்கொட்டையை வைத்து பல்லாங்குழி ஆட்டம் (பாண்டி ஆட்டம்) ஆடப்படுகிறது. எனக்கு தெரிந்து 4 வகை பாண்டி ஆட்டங்கள் இருக்கின்றன.
1. இருவர் மட்டுமே விளையாடும் சாதா பாண்டி
விளையாட்டில் ஈடுபடும் இருவரும் எதிர் எதிராக அமர்ந்து கொள்ள வேண்டும் (இருவருக்கும் தலா 7 குழிகள்). ஒவ்வொரு குழியிலும் 5 காய்கள் (புளிங்கொட்டை அல்லது வேப்பங்கொட்டை) வீதம் மொத்தம் 70 காய்கள் 14 குழிகளிலும் நிரப்பப்பட வேண்டும். முதலில் ஒருவர் விளையாட வேண்டும் அதாவது ஒரு குழியில் இருக்கும் 5 காய்களை பிரித்து வலமாக ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொன்றாக போட்டுக்கொண்டே செல்ல வேண்டும். 5 குழி முடிந்ததும் 6 குழியில் இருக்கும் காய்களை முன்பு போலவே பிரித்துப் போட வேண்டும். இதே போல பொட்டுக்கொண்டே சென்றால் சில குழிகள் காய்கள் இல்லாமல் காலியாகி விடும். பிரித்து போட்டுக் கொண்டிருக்கும் காய்கள் ஒரு காலியாக இருக்கும் குழிக்கு முன் முடிந்து விட்டால் காலியாக இருக்கும் குழிக்கு அடுத்த குழியிலும் அதற்கு எதிரில் இருக்கும் காய்களை எடுத்துக் கொள்ளலாம். இரணடு காலி குழிகளிற்கு முன் கையிலிருக்கும் காய்கள் முடிந்து போனால் ஆடுபவர் ஒன்றுமில்லாமல் "சும்மா" போக வேண்டும்.அதோடு ஒருவரின் ஆட்டம் முடிந்து விடும். அடுத்தவர் அதைப்போலவே ஆட வேண்டும். ஒருவரின் பங்கிலிருக்கும் 7 குழிகளில் ஏதாவது ஒரு குழியில் 4 காய் வருவது "கண்" என்று அழைக்கப்படும், அதை அந்த பக்கத்திலிருப்பவர் எடுத்துக்கொள்ளலாம். ஆட்டத்தின் முடிவில் நன்றாக விளையாடத் தெரியாதவரிடம் 35 க்கு (< 50%) குறைவான காய்களே இருக்கும். காய்கள் நிரப்பாமல் மீதி இருக்கும் குழிகளில் "பீத்தை" (ஏதாவது குப்பை அல்லது காகிதம்) போட வேண்டும்.பீத்தை குழிகளில் அடுத்தவர் காய் போட்டால் பீத்தை போட்டவர் அந்த காயை "ஊதி" எடுத்துக்கொள்ளலாம் (as bonus). இப்படி விளையாண்டு கொண்டே போனால் ஒருவரிடம் (விளையாடத் தெரியாதவரிடம்) 5 க்கும் (ஒரு குழிக்கும் பற்றாகுறை)குறைவான காய்கள் இருக்கும் நிலை வரலாம். அப்படி வரும் போது "கஞ்சி காய்ச்சுதல்" வேண்டும். "கஞ்சி காய்ச்சுதல்" என்றால் ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொரு காய் போட்டு முன்பு போலவே விளையாட வேண்டும். சில சமயங்களில் ஒருவர் எல்லா காய்களையும் இழப்பதும் உண்டு. அப்போது வெற்றி பெற்றவர் தோற்றவரைப் பார்த்து "தோத்தாந்துள்ளி....." பாடலாம்
இது போல 3 பேர் விளையாடும் மிகவும் விரு விருப்பான "ராஜா பாண்டி", ஒருவர் மட்டுமே முடிவே இல்லாமல் விளையாடும் "சீதா பாண்டி" (சீதை அசோக வனத்தில் இருக்கும்போது விளையாடியதாம்), நிறைய காய்கள் வைத்து விளையாடும் "காசி பாண்டி" (இது என்க்கு சுத்தமாக மறந்து போய்விட்டது). இது நான்கும் நான் அறிந்தவை. யாருக்காவது தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாளை அல்லது வேரொரு நாள் சொல்கிறேன்....அல்லது வேறு யாராவது இவற்றை இங்கே பதிவு செய்தாலும் மிக நன்று.
இதையன்றி உங்கள் ஊர்ப் பகுதிகளில் விளையாடப்படும் வேறு வகையான பாண்டி ஆட்டம் ஏதாவது இருந்தாலும் இங்கே பதிவு செய்யுங்கள்.
இது மிகப் பழைமையான விளையாட்டு....ஒரு காலத்தில் தங்க பல்லாங்குழியும் முத்துக்களும் வைத்து பாண்டி ஆட்டம் ஆடியதாக எங்கோ படித்திருக்கிறேன்.....
உபயம் :- விக்கிபீடியா.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

3 Response to "நாம் தொலைத்த விளையாட்டுகள் - பல்லாங்குழி"

  1. Unknown says:

    நேற்று இளையகவியின் பதிவைப் (தொலைந்த விளையாட்டுக்கள்: பல்லாங்குழி) படித்த சில மணி நேரங்களில் சியாட்டலிலுள்ள (Seattle) Pike Place Market-க்கு செல்ல நேர்ந்தது. இந்தியாவில் உள்ள எனது ஆசிரியர் ஒருவருக்கு கொடுப்பதற்காகப் பரிசு வாங்க நானும் என் தோழியும் இன்னொரு நண்பரும் சென்றோம்.

    அங்கு ஒரு ஆப்பிரிக்க கலைப் பொருட்கள் விற்கப்படும் ஒரு கடையில் நாங்கள் பார்த்தது வேறொன்றுமில்லை.....சாட்சாத் நம் பல்லாங்குழிதான். அட வாங்கிக்கிட்டுப் போய் விளையாடி இளையகவிக்கு ஒரு கடிதம் எழுதலாமுன்னு நினைத்து கவனித்ததில், அதிலிருந்தது பக்கத்திற்கு 6 குழிகள் மட்டுமே. அப்புறம் விசாரித்ததில் தெரிந்தது அது ஆப்பிரிக்க விளையாட்டாம்......பெயர் oware என்று இருந்தது.

    சரி எல்லாம் தெரிந்த நம்ம தலை, கூகுளைக் கேட்டுப் பார்க்கலாமுன்னு நினைச்சு தேடினா ஆச்சரியம்தான் காத்திருந்தது. இது நம்ம பல்லாங்குழியேதான்....ஆனால் பக்கத்திற்கு ஏழு குழிக்கு பதில் ஆறு தான் இருக்கும். இது ஆப்பிரிக்க திருமணங்களில் விளையாடப்படும் விளையாட்டாம். அதுமட்டுமல்ல, இது கானா நாட்டின் தேசிய விளையாட்டாம்.

    இது பொதுவாக இருவர் விளையாடும் விளையாட்டு. 48 விதைகள் அல்லது கூழாங்கற்கள் கொண்டு விளையாடப்படும் இந்த விளையாட்டில் முதலில் 25 விதைகளை சேகரிப்பவர் வெற்றியடைந்தவராவார். விளையாடிப் பார்க்காத இதைப் பற்றி கதைவிட விருப்பமில்லை. எனவே ஆர்வமுள்ளவர்கள் விக்கிபீடியாவில் படித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

    கலாச்சாரங்களின் ஒருமித்த வளர்ச்சி நம்மை எப்போதுமே ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று. இது அதுக்கான ஒரு அழகிய எடுத்துக்காட்டு. இதை எழுதும் பொழுது நினைவுக்கு வரும் இன்னொருவிசயம் இருக்கு. அப்பொழுது புது தில்லியில் வாழ்ந்த காலம். நானும் என் தோழியும் போயிருந்த ஒரு ஆப்பிரிக்க மெல்லிசை நிகழ்ச்சியில், அங்கிருந்தவர்களால் 90% ஆப்பிரிக்க பாடல்களை புரிந்துகொள்ள முடிந்தது. அத்தனை ஒற்றுமை நம் Hindiக்கும் அந்த ஆப்பிரிக்க மொழிக்கும்.....

    அது மட்டுமா?......கலிகாலம்... நம்ம கணிப்பொறியிலும் வந்துடுச்சு இந்த விளையாட்டு.
    இதுதான் அந்த ஊரு பல்லாங்குழி...

  2. இளைய கவி says:

    மித்ரன் தங்களின் வருகைக்கும் நேரத்திற்க்கும் மிக்க நன்றி.

    என்றும் அன்புடன்
    இளையகவி

  3. g says:

    பல்லாங்குழியைப் பற்றி எழுதியது மிக நன்று. பிரான்ஸிலிருந்து எப்போ வந்ததீர்

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)