நாம் தொலைத்த விளையாட்டுக்கள் குறித்து





இப்போதுள்ள சிறுவர்களுக்கு விளையாடக்கிடைக்கும் X-BOX, Playstation, GameBoy இவற்றையெல்லாம் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த நவீன விளையாட்டு சாதனங்களை இந்தத் தலைமுறை சிறுவர்கள் கையாளும் லாவகம் பிரமிக்க வைக்கிறது. அதே போல் நமது சிறுவயதில் நமக்கு நமது சிறு வயதில் என்ன விளையாடக்கிடைத்தது என்றும் ஆதங்கப்படவும் வைக்கிறது.

ஒளிந்து பிடித்து விளையாடுதல் :-
'சாட் பூட் த்ரீ' என்று சொல்லி ஓவ்வொருவராக விலக்கிவிட்டு கடைசியில் யார் இருக்கிறார்களோ அவர்கள் ஒன்றிலிருந்து பத்துவரை கண்ணை மூடிக்கொண்டு எண்ணவேண்டும். அதற்குள் மற்றவர்கள் ஒளிந்து கொள்ளவேண்டும். பின்பு ஒளிந்து கொண்டவர்களை ஒவ்வொருவராக கண்டு பிடிக்க வேண்டும். ஒளிந்திருப்பவரை ஒவ்வொருவராக கண்டு பிடித்தவுடன் 'ஒன்னீஸ்' 'ரெண்டீஸ்' :-) என்று சொல்லுவார்கள். இந்த விளையாட்டின் பெயரே ஒன்னீஸ் ரெண்டீஸ் என்று சொல்லுவது உண்டு. அனைவரும் கண்டு பிடிக்கப்பட்ட பின் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டவர் பின்பு தொடர வேண்டும். இப்படி போய்கொண்டே இருக்கும்.

பம்பர விளையாட்டு :-
பம்பர விளையாட்டு மிகவும் பிரசித்தமானது, 1,2,3 சொல்லிவிட்டு எல்லோரும் ஒரே சமயத்தில் பம்பரத்தை சுழலவிட்டுவிட்டு சாட்டையால் சுற்றி கையில் எடுக்க வேண்டும். யார் கடைசில் எடுக்கிறார்களோ அவர்களது பம்பரத்தை மண் தரையில் ஒரு வட்டம் போட்டுவிட்டு அதன் உள்ளே இடுவார்கள். அப்புறம் ஒவ்வொருவராக பம்பரத்தை வேகமாக சுழற்றி முதலில் அந்த வட்டத்துக்குள் குத்துமாறு சுழலவிடவேண்டும். வட்டத்துக்குள் குத்தாவிட்டால் அவரது பம்பரமும் வட்டத்துக்குள் வைக்கப்படும். இது ஒரு சுவாரசியமான ஆட்டம். ஆட்டத்தின் முடிவில் தோற்பவரின் பம்பரத்தின் மேல் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒரு 'ஆக்கர்'(பம்பரத்தின் மேல் ஆணியை வைத்து புள்ளி விழுமாறு ஓங்கி அடிப்பார்கள்) வைப்பார்கள். சில சமயங்களில் பம்பரம் உடைவது கூட உண்டு. சிலசமயம் பெண்களை கவர, பம்பரத்தை சுழற்றி தரையில் படாமலே கையில் எடுப்பதுவும் உண்டு.


கோலி விளையாட்டு :-
சுவற்றின் ஓரத்தில் ஒரு சதுரமாக ஒரு கோடு போட்டுவிட்டு அதற்குள் சில கோலிகளை உருட்டுவார்கள். அதற்குப்பிறகு எதிராளி சொல்லும் கோலியை எறிந்து அடிக்க வேண்டும். இதற்கு சிகரெட் அட்டை, கோலி குண்டு இவற்றை பணயமாக வைத்து ஆடுவது உண்டு. கோலிகுண்டு சிலசமயம் சிலர் பணம் வைத்து ஆடுவதால், வீட்டார்கள் அதை பெரும்பாலும் விளையாட அனுமதிப்பதில்லை.


கிட்டிப்புல்(கில்லி) :-
மிகவும் பிரபலமான ஆட்டம். ஆனால் பல இடங்களில் இதை விளையாடவிட மாட்டார்கள். எனக்கு தெரிந்து நிறைய பேருக்கு கில்லி விளையாட்டால் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்டம் மிகவும் சுவாரசியமானது. தரையில் நீளவாக்கில் தோண்டிவிட்டு கிட்டிப்புல்லை அதற்கு குறுக்கில் வைக்க வேண்டும், பிறகு கையில் இருக்கும் கோலால் , கிட்டிப்புல்லை வேகமாக அழுத்தம் கொடுத்து நெம்பித் தள்ள வேண்டும். எதிராளிகள் அந்தப்புறம் நின்று கொண்டு இருப்பார்கள். அவர்கள் இதை கீழே விழாமல் பிடித்துவிட்டால் நீங்கள் அவுட்.. பின்பு அவர்கள் முறை. பிடிக்காமல் தூரத்தில் போய் விழுந்தால், நீங்கள் கோலை குறுக்காக வைக்கவேண்டும் .பின்பு அவர்கள் கிட்டிபுல்லை தூக்கி குறி பார்த்து எறிந்து அது கோலில் பட்டால் நீங்கள் அவுட். அவர்கள் எறியும் போது அது கோலில் படாமல் தூரத்தில் போய் விழுந்தால் நீங்கள் ஆட்டத்தை தொடரலாம். ஆட்டம் எப்படியென்றால், நீங்கள் கிட்டிப்புல்லின் சீவியிருக்கும் ஒரு முனையில் அடிக்க வேண்டும், அது எம்பி வரும்போது அதை கோலால் எத்தனை முறை தட்ட முடியுமோ அவ்வளவு புள்ளிகள். அப்படி தட்டிக்கொண்டே குழியிலிருந்து எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டும். ஒரு முறை கூட தட்ட முடியாவிட்டால் அங்கிருந்து குழி இருக்கும் தூரத்தை கையிலிருக்கும் கோலால் அளக்க வேண்டும் எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு புள்ளிகள். இப்படியே நீங்கள் அவுட் ஆகும் வரை ஆட்டம் தொடரும். ஒரு தெருவில் ஆடும் ஆட்டம் அப்படியே பக்கத்து தெருவிற்கும் போவது உண்டு.


பே பே :-
பள்ளியில் இடைவேளைகளில், சோளத்தட்டையால் எறி பந்து விளையாடுவது உண்டு.


செதுக்கல் :-
புளியங்கொட்டையை ஒரு வட்டத்திற்குள் கொட்டிவிட்டு அதை தட்டையான கல்லால் செதுக்கி வெளியே கொண்டு வந்து விளையாடும் 'செதுக்கு சில்' ரொம்ப பிரபலம்.


பட்டம் விடுதல் :-
ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்கு சென்று மாஞ்சா தடவி பட்டம் விடுதல் ரொம்ப பிரபலம். பட்டம் விடுவது ஒரு பெரிய கலையாகும். இதில் முக்கியமான ஒன்று சூச்சம் போடுதல் ( இதில் 2 வகை உண்டு மேல் முடிச்சு கீழ் முடிச்சு) இன்னும் நிறைய எழுதலாம் தொடர நினைப்பவர்கள் பின்னுட்டம் இடவும்.


பெண்கள் விளையாட்டு :-
பெண்களெல்லாம் கண்கட்டு விளையாட்டு, பரமபதம், நொண்டி , சொட்டாங்கல்( இது மிகவும் பிரபலமான விளையாட்டு), பல்லாங்குழி இவையெல்லாம் விளையாடுவது உண்டு.


கிச்சு கிச்சு தாம்பளம் :-
நல்ல மணல் விளையாடக்கிடைத்தால் மணலை நீளவாக்கில் குவித்துவிட்டு எதிரெதிராக உட்கார்ந்து கொண்டு சிறு கல்லை அதற்குள் ஒளித்து வைத்து எதிரில் இருப்பவர் அது எங்கிருக்கிறது என்பதி அனுமானித்து அதன் மேல் இருகைகளை வைத்து மூடவேண்டும். சரியாக கணித்தால் பின்பு அடுத்தவர் முறை.


பச்சகுதிர விளையாட்டு :-
முதல்ல ஒருத்தர் தரையிலே கால் நீட்டி உட்காந்து அவரை எல்லோரும் தாண்டனும்.. அப்புறம், ஒரு கையை வப்பார், அதையும் தாண்டீட்டா ரெண்டு கையையும் வப்பார், அப்புறம் எழுத்து குனிஞ்சு நிக்கையிலே தாண்டனும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா தாண்டனும்.. எப்பயாவது தாண்டையிலே இடிச்சிட்டா.. அப்புறம் இடிச்சவங்க உட்காற.. அப்படியே வெளையாட்டு தொடரும்..


மேலே சொல்லாமல் விடுபட்டுப்போன எவ்வளவோ விளையாட்டுக்கள் இருக்கின்றன. இப்போது இருக்கும் சிறுவர்களுக்கு இவைபற்றியெல்லாம் எந்த அளவுக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. கிராமங்களில் இவை இன்னும் உயிருடன் இருக்கின்றன என்று நம்புகிறேன். ஆனால் ஒன்று மட்டும் உண்மை இதை பற்றி எழுதும்போதே மனதுக்குள் மெல்லிதான ஒரு ஆனந்தம் பரவுவதை உணர முடிகிறது...
சில தகவல்கள் கீழிருந்து உருவப்பட்டது . ( 4 பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல டொன்ட டொன்ட டொன்ட டொய்ன். )
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

9 Response to "நாம் தொலைத்த விளையாட்டுக்கள் குறித்து"

  1. வசந்தம் ரவி says:

    உங்களுடைய இந்த தொடர் எனக்கு பிடித்து இருக்கிறது , இதுபோல இன்னும் உயிரோட்டமுள்ள பதிவுகளை தாருங்கள்

  2. கீழை ராஸா says:

    இளமைக்கால கிராமத்து விளையாட்டுக்களை இனம் பிரித்து, இறந்த காலத்தின் இறவா நினைவுகளை இதயம் திறந்து பார்க்க வைத்துள்ளீர்...இந்த நவீன உலகில், உண்மையில் நாம் தொலைத்தது, விளையாட்டுக்களை மட்டுமல்ல நம்மையும் தான்...

  3. இளைய கவி says:

    நண்பர் ரவி,

    மிக்க நண்றி இதுபோல இன்னும் உயிரோட்டமுள்ள பதிவுகளை தர தொடர்ந்து முயற்ச்சி செய்கிறேன்

  4. இளைய கவி says:

    //
    நாம் தொலைத்தது, விளையாட்டுக்களை மட்டுமல்ல நம்மையும் தான்...
    //

    மிகவும் சரியாக சொண்ணீர்கள் ராசா அவர்களே வருகைக்கு மிக்க நண்றி

  5. Chandravathanaa says:

    நன்றி

  6. pudugaithendral says:

    பல்லாங்குழி, 5 கல்லு, கல்லா, மண்ணா? இதெல்லாம் விட்டுடீங்களே?

    நேற்றுதான் எங்க வீட்டுல இதப்பத்தி பேசிகிட்டு இருந்தோம்.

    இன்றைய பிள்ளைகள் பாவம்.
    தன் பிள்ளைபிராயத்தை தொலைத்துவிட்டு வாழ்கின்றனர்.

  7. இளைய கவி says:

    புதுகைத் தென்றல் said ..
    //இன்றைய பிள்ளைகள் பாவம்.
    தன் பிள்ளைபிராயத்தை தொலைத்துவிட்டு வாழ்கின்றனர்//

    மிகச்சரியாக சொண்ணீர்கள் எனக்கும் அதே கவலை தான்

  8. இளைய கவி says:

    // Chandravathanaa said...
    நன்றி
    //

    இந்த நன்றி எதற்க்காக என நான் தெரிந்துகொள்ளலாமா ??

  9. Chandravathanaa says:

    இந்த நன்றி

    1-பயனுள்ள இந்தப் பதிவிற்காகவும்.

    2-(உங்களிடம் சொல்லாமலே) உங்கள் பதவிற்கான இணைப்பை எனது பதிவில் போட்டேன் அதற்காகவும்

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)